உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், தனது மனைவி, பிள்ளைகளைக் கொன்று தானும் இறந்துவிட்டதுபோல நாடகமாடியவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளழர்.
குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி மற்றும் பிள்ளைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்திய 34 வயது ராகேஷ், அவர்களைக் கொன்று, தனது வீட்டின் கீழ்தளத்தில் புதைத்துவிட்டார்.
இதையும் படிக்கலாமே.. செப்.30க்குள் இதைச் செய்யாவிட்டால் எஸ்பிஐ கணக்கு முடக்கப்படும்
தனது குடும்பத்தினரைக் கொன்று சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, காஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த தனது நண்பனையும் கொன்று, தனது வீட்டில் வைத்து, அந்த உடலுக்கு அருகே தனது அடையாள அட்டை உள்ளிட்ட பொருள்களை வைத்து, தானும் இறந்துவிட்டதாகக் காவல்துறையினரை நம்ப வைக்க நாடகமாடியுள்ளார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மகள் மற்றும் 3, 1 வயதுள்ள அவரது குழந்தைகளையும் மருமகன் ராகேஷ் கடத்தி விட்டதாக பிஸ்ரக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இரண்டு மாதங்கள் கழித்து, காஸ்கஞ்ச் மாவட்டம் தோல்னா காவல்நிலையத்தில் ரகேஷ் கொல்லப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், ராகேஷ் உயிரிழக்கவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பததையும் கண்டுபிடித்தனர். அவரைக் கைது செய்து நல்ல முறையில் விசாரணை நடத்தியதில், அவர் தனது மனைவி, பிள்ளைகளைக் கொன்று தனது வீட்டில் புதைத்து வைத்ததை ஒப்புக் கொண்டார். உடனடியாக அவர் சொன்ன இடத்தைத் தோண்டி அங்கிருந்து எலும்புத் துண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து, 2018ல் பதிவு செய்த இரண்டு முதல் தகவல் அறிக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன.