மிசோரம் மாநில அரசாங்கம் மியான்மரில் இருந்து அகதிகளாக குடியேறியவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வந்திருக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலிருந்து பிழைப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இந்தியாவிற்குள் அகதிகளாக குடியேறியவர்களின் பெரும்பாலோனோர் மிசோரம் மாநிலத்தில் இருக்கிறார்கள்.
சட்டரீதியாக அவர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாததால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வியும் பெரிய பாதிப்பிற்கு உள்ளானது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானுடனான எல்லையை மூடியது பாகிஸ்தான்
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி மிசோரம் மாநிலக் கல்வி இயக்குனர் ஜேம்ஸ் லால்ரிங்கனா குழந்தைகள் கல்வி கற்பது அவர்களுடைய உரிமை எனக் கூறியதோடு மியான்மரில் இருந்து வந்தவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.
முக்கியமாக மியான்மரை மிசோரத்துடன் இணைக்கும் மாவட்டங்களான சம்பாய், ஜிகா, லாங்டலாய், சேர்ச்சிப் ,நாந்திலால் மற்றும் சாய்டூல் பகுதிகளில் குடியிருக்கும் 15,000 க்கும் மேற்பட்ட அகதிகளின் குழந்தைகளை பக்கத்தில் உள்ள பள்ளிகளிலேயே சேர்க்க ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் பள்ளிக்கான சுற்றறிக்கையில், இலவசக் கட்டாய கல்வி கற்கும் உரிமைச் சட்டம் 2009ன் படி, ஒரு குழந்தை தன்னுடைய 6 வயதிலிருந்து 14 வயது வரையும் கல்வி கற்கும் உரிமையைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் அனைத்து அரச பள்ளிகளிலும் சேர்க்கை நடைபெறும் நாளில் புலம்பெயர் குழந்தைகளை அனுமதித்து சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
முன்னதாக , மிசோரம் மாநிலத்தில் மியான்மரைச் சேர்ந்த 325 குழந்தைகள் கல்வி கற்று வருகிற நிலையில் மேலும் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
பின் இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் உரையாற்றிய ஜேம்ஸ் லால்ரிங்கனா , ' புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை சரிவர கவனிக்க வேண்டும். 12ஆம் வகுப்பு வரை அவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை பள்ளியிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது' என்றதோடு அடிப்படையில் நாம் எல்லோரும் மனிதர்கள் . ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டுமோ ஒழிய பகை கொண்டு அல்ல. இங்கே அகதிகளாகக் குடியேறிய பலர் பள்ளிக்கூடங்கள் , பொது மற்றும் சமூகக் கூடங்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை உள்ளூர் மக்கள் நிறைவு செய்கின்றனர். ஒருநாள் அவர்களின் பிரச்னைகள் முடிந்த பின் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை' எனத் தெரிவித்தார்.
மியான்மரில் இருந்து மிசோரம் வந்த சின் பிரிவினருக்கும் இந்தியாவில் இருக்கும் மிஸோஸ் பிரிவினருக்கும் பழங்காலம் முதலே தொன்மையான தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.