முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கும் மாநிலங்கள்: தமிழகம்?
புது தில்லி: நாடு முழுவதும் கரோனாவுக்கு எதிரான பேராயுதமாகக் கருதப்படும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமெடுத்தாலும், ஒரு சில மாநிலங்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியிருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். ஆனால், இங்கு முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
60 மற்றும் அதற்க மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் நாட்டின் சராசரி அதாவது ஆயிரம் பேருக்கு 947.3 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவே மாநிலத்தின் சராசரியாகப் பார்க்கும் போது தமிழகத்தில் இது 523.1 ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 651.1 ஆகவும், மேற்கு வங்கத்தில் 85348 ஆகவும் உள்ளது. இம்மூன்று மாநிலங்களில்தான் ஒரு கோடிக்கும் அதிகமான முதியவர்கள் இருக்கிறார்கள்.
நல்லவிஷயமாக, மகாராஷ்டிரத்தில் 1.45 கோடி முதியவர்கள் இருக்கும் நிலையில், அங்கு 1000க்கு 951.12 முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், இது நாட்டின் சராசரியை விட சற்று அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
கரோனா மூன்றாம் அலைக்கான அபாய எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாநிலங்களில் கரோனா எளிதில் தாக்கும் அபாயம் மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் கொண்ட முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியிருப்பது, கவலையை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையிலும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, முதியவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களில், அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மீண்டும் ஒரு முறை தீவிரப்படுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 61.6% பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். 31.4% பேர் இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.