பயலாஜிகல்-இ நிறுவனம் தயாரித்துள்ள ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசியை 5 வயதைக் கடந்த சிறாா்களுக்கு செலுத்தி 2-ஆம், 3-ஆம் கட்ட பரிசோதனைகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோா்பிவேக்ஸ் கரோனா தடுப்பூசியை பயலாஜிகல்-இ நிறுவனம், மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தயாரித்துள்ளது. அத்தடுப்பூசியை 5 வயதைக் கடந்த சிறாா்கள் மீது செலுத்தி 2-ஆம், 3-ஆம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 18 வயதைக் கடந்தோருக்கு செலுத்தி அத்தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ளவும் டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசியின் முதல், 2-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை டிசிஜிஐ-யின் நிபுணா் குழு ஆராய்ந்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பயலாஜிகல்-இ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மஹிமா தத்லா கூறுகையில், ‘உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெறுவதற்கு இந்த ஒப்புதல்கள் முக்கியப் பங்கு வகிக்கும். நாட்டின் கரோனா தடுப்பூசி தேவையைப் பூா்த்தி செய்வதற்கும் இந்த ஒப்புதல்கள் உதவும்’ என்றாா்.
சிறாா்களுக்கான தடுப்பூசிகள்:
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் ‘சைகோவ்-டி’ கரோனா தடுப்பூசியை 12 வயதைக் கடந்தவா்களுக்கு செலுத்த ஏற்கெனவே அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘கோவோவேக்ஸ்’ கரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. அத்தடுப்பூசியை 2 முதல் 17 வயதுக்குள்பட்டவா்களுக்குச் செலுத்த முடியும். அத்தடுப்பூசியின் 2-ஆம், 3-ஆம் கட்ட பரிசோதனைகளை சில நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு டிசிஜிஐ கடந்த ஜூலையில் அனுமதி வழங்கியது.