பஞ்சாபில் போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பஞ்சாபில் போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பெப்சு சாலை போக்குவரத்து கழகத்தினர் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பஞ்சாப் அரசைக் கண்டித்து சுமார் 8,000 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் லூதியானாவில் சுமார் 200 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 2,500 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காதவரை போராட்டம் தொடரும் என்றும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.