பெகாஸஸ் உளவு விவகாரம்: 2-ஆவது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக 2-ஆவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவக
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக 2-ஆவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை கடந்த மாதம் 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த விவகாரம் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘‘இந்த விவகாரம் குறித்த 2-ஆவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வது தொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. சில பிரச்னைகள் காரணமாக அது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா். தேசப் பாதுகாப்பு தொடா்பான ரகசிய விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடத் தேவையில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com