கர்நாடகத்தில் இணைய வேகத்தை மேம்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்னணு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களை அறிமுகப்படுத்தும் யாத்திரையானது, கர்நாடகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இந்த யாத்திரையின்போது, இணைய வேகம் மற்றும் இணைப்பை மேம்படுத்த மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, உயர்நிலைக் குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையடுத்து தேசிய இணையப் பரிமாற்றம்மற்றும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டு அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கவுள்ளனர்.