திருப்பதி: திருமலை திருப்பதியில் இன்று முதல் இலவச பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு, உள்ளூர் பக்தர்களுக்கு டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலவச பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
எனினும், ரூ.300 கட்டண தரிசனம், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
ஏழை, எளிய மக்களுக்கும், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்திருந்த நிலையில், இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச பொது தரிசனத்துக்கான டோக்கனை விநியோகிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டோக்கன்கள் தர கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் வளாகத்தில் காலை 6 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படும், டோக்கன் வாங்கும் போது, பக்தர்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.