புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு வந்துள்ளார். அவர் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யவிருக்கிறார்.
ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஜம்மு வந்துள்ள ராகுல், மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லுவதற்கான, கத்ரா முகாமை வந்தடைந்ததாக கட்சியினத் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து அவர் கட்சியினருடன் இணைந்து நடைப்பயணமாகவே கோயிலுக்குச் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஜம்முவில் இரவு தங்கும் ராகுல், செப்டம்பர் 10ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிறகு, உள்ளூர் தலைவர்களுடன் கலந்துரையாடும் ராகுல், பிறகு மாலையில் தில்லி திரும்பவிருக்கிறார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ராகுல் ஜம்முவுக்குச் செல்வது இது இரண்டாது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த ராகுல், ஸ்ரீநகரில் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது கீர் பவானி கோயில் மற்றும் ஹஸ்ரத் தர்கா ஷரீப்ஃபுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.