திருமலை திருப்பதியில் நேற்று(செப்-8) முதல் இலவச பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளூர் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.
இதில் நாளொன்றுக்கு 2,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதால் அத்தனை டோக்கன்களும் 2 மணி நேரத்தில் தீர்ந்தன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலவச பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் ரூ.300 கட்டண தரிசனம், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
ஏழை, எளிய மக்களுக்கும், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்திருந்த நிலையில், நேற்று முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச பொது தரிசனத்துக்கான டோக்கனை விநியோகிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டோக்கன்கள் தர கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் கூட்டமாக டோக்கன்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் 2,000 டோக்கன்களும் 2 மணி நேரத்தில் தீர்ந்ததால் பல பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.