முன்பு ஒரு காலத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆதிக்கம் செலுத்தியது போன்ற சூழல் இப்போது இல்லை என்பதை காங்கிரஸ் ஏற்று கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒரு காலத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அந்த சூழல் தற்போது இல்லை. உண்மையை ஏற்று கொள்ள வேண்டும். காங்கிரஸ் அதனை ஏற்று கொண்டால்தான் எதிர்கட்சிகளுடன் இணக்கம் அதிகரிக்கும். தலைமை குறித்த விவாதம் வந்தால், மாற்று கருத்துகளை ஏற்று கொள்ளும் மனநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருப்பதில்லை" என்றார்.
அடுத்த மக்களவை தேர்தலுக்கு ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் முகமாக மம்தா காட்டப்படும்போது, தங்களின் தலைவர் ராகுல் காந்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, "பல தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமை குறித்து மாற்று நிலைபாடுகளை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்" என பதிலளித்தார்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 34,973 பேருக்கு தொற்று: 260 பேர் பலி
இந்தியா டூடே குழுமத்தின் மராத்தி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், "உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜமீன்தாரிகள் பெரிய அளவிலான நிலங்களையும் மாளிகைகளையும் வைத்திருப்பார்கள் என்ற கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதில் அவர்கள் வைத்திருந்த நிலங்கள் குறைந்தன. ஆனால், அப்படியே இருந்த மாளிகைகளை மட்டும் அவர்களால் பராமரிக்க முடியவில்லை" என சரத் பவார் தெரிவித்தார்.