புது தில்லி: திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தலா ஒரு உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் உள்பட, நாடு முழுவதும் 16,500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 164.46 கோடி மதிப்பிலான 7 உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் வெள்ளிக்கிழமை காணோலி மூலம் தொடக்கி வைத்தார்.
மேலும், தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கூடுதல் தொழில்நுட்ப வசதிக்கான திட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், நல்லிபாளையம், சிவன்மலையில் உள்ள இந்திய உணவுப் பூங்காவில் ஆண்டுக்கு 7,200 மெ.டன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் கேக்குகள் தயாரிக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனம் (சாம்சன் சிஎன்ஓ தொழிலகங்கள்) ரூ. 9.57 கோடியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 3.16 கோடி மானியம் அளித்துள்ளது. இதை மத்திய அமைச்சர் தொடக்கிவைத்தார்.
இதே போன்று ஈரோடு மாவட்டம், கொடுமுடி, புஞ்சை கிளம்பாடியில் ரூ.19.99 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 7,500 மெ.டன் முட்டை பவுடர் தயாரிக்க (எஸ்கேஎம் ) முட்டை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றும் மத்திய அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.5 கோடி மானியம் வழங்கியுள்ளது.
இந்த இரு உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மூலம் 1,550 சிறுவிவசாயிகளும் 20 பெரு விவசாயிகளும் பலனடைவர். மேலும், 330 பேருக்கு நேரடியாகவும், 990 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதே மாதிரி, உத்தரப் பிரதேச மாநிலம் , மீரட், கெளதம்புத் நகர், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலும் நிறுவப்பட்ட மூன்று உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களையும் மத்திய அமைச்சர் தொடக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ரூ. 1.20 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தானிய அறிவியல் சிறப்புக்கான மையமும் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தில் உணவுப் பொருள்களின் தர மதிப்பீடு, பதப்படுத்தும் நெல், திணை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றின் தர சோதனைகளில் மாணவர்களுக்கும், உணவுப் பதப்படுத்தல் தொழிலகங்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ரூ.2.5 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அடிப்படையில் உணவுப் பொருள்களில் கலந்திருக்கும் ரசாயனங்களை கண்டறியும் மின்னணு பகுப்பாய்வு வசதிகளும் இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.