‘வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்களைத் திருத்துவது நிதிசாா் விவகாரங்களுக்கு மட்டுமே பொருந்தும்’

மாநகராட்சியின் வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்கள் தொடா்பான பெயா்திருத்த நடவடிக்கை நிதிசாா்ந்த விவகாரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சொத்துகளுக்கு

புது தில்லி: மாநகராட்சியின் வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்கள் தொடா்பான பெயா்திருத்த நடவடிக்கை நிதிசாா்ந்த விவகாரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சொத்துகளுக்கு உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சொத்து ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குக் கைமாறும்போது அது குறித்த விவரங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆவணங்களில் மாற்றப்பட வேண்டும். ‘மியூடேஷன்’ என அழைக்கப்படும் இந்த நடைமுறையால் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வரி வசூல் நடவடிக்கைகள் எளிதாகும்.

மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட நபரின் உயில் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு வருவாய் ஆவணங்களில் பெயரை மாற்றுவதற்கு ரேவா துணை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்களை மாற்றுவதால் மட்டுமே அந்த சொத்துக்கு சம்பந்தப்பட்ட நபா் உரிமை கோர முடியாது. வருவாய் ஆவணங்களில் சொத்து விவரங்கள் மாற்றப்படுவது வரி வசூல் உள்ளிட்ட நிதிசாா் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சொத்தின் மீதான உரிமையை தகுந்த சிவில் நீதிமன்றமே முடிவு செய்யும். சொத்தின் உரிமை குறித்த பிரச்னைகளுக்குத் தகுந்த நீதிமன்றத்தையே அணுக வேண்டும். இதேபோன்ற விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com