மும்பை புறநகர் பகுதியான சகினகாவில் டெம்போ வாகனத்திற்குள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட 34 வயது மதிக்கத்தக்க பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு, தில்லி மருத்துவ மாணவிக்கு நேர்ந்தது போன்று இவருக்கும் கொடூரங்கள் நிகழ்ந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு இரும்பு தடியால் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் இப்பெண் தாக்கப்பட்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை காலை, கைராணி சாலையில், ஆண் ஒருவர் பெண்ணை தாக்கிவருவதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவத்திற்கு சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு ராஜவாதி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. உடல் ஒன்று சாலையில் கிடப்பது போன்றும் அதற்கு அருகே ஒருவர் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சாலை அருகே நின்று கொண்டிருந்த டெம்போ வாகனத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல், அந்த வாகனம் முழுவதும் ரத்த கறை படிந்துள்ளது. கொலை முயற்சி, பாலியல் வன்புணர்வு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மோகன் கைது செய்யப்பட்டார். பெண் உயிரிழந்துவிட்டதால், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.