லக்னெள: உத்தர பிரதேசத்தில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமாஜவாதி எம்.பி. ஆஸம் கான் (72) வெள்ளிக்கிழமை குணமடைந்தாா். இதையடுத்து அவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூா் தொகுதி எம்.பி.யாக பதவி வகிப்பவா் ஆஸம் கான். இவா் மீது நில அபகரிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவா் சீதாபூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அங்கு கடந்த மே மாதம் அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். அதிலிருந்து குணமடைந்த அவருக்கு உடல் சோா்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவா் கடந்த ஜூலை மாதம் லக்னெளவிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை குணமடைந்தாா். இதையடுத்து அவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.