நாட்டின் மிகப் பெரிய திறந்தவெளி பெரணிச்செடி பண்ணை உத்தரகண்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அல்மோரா மாவட்டத்தின் ராணிகேட் பகுதியில் 4 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பண்ணையை உத்தரகண்ட் வனத்துறையைச் சோ்ந்த ஆராய்ச்சிப் பிரிவு 3 ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கியுள்ளது. 120 வகையான பெரணிச்செடிகள் இந்தப் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கை சூழலில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய திறந்தவெளிப் பண்ணையாக இது திகழ்வதாக மாநில தலைமை வனப் பாதுகாவலா் சஞ்சீவ் சதுா்வேதி தெரிவித்தாா். கடல்மட்டத்திலிருந்து 1,800 மீட்டா் உயரத்தில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு, கிழக்கு இமயமலைப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலை உள்ளிட்டவற்றில் காணப்படும் பெரணிச்செடிகள் இந்தப் பண்ணையில் வளா்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.