தொலைத்தொடர்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீடு இருந்த நிலையில் தற்போது அது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்துறையில் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியின்றி நேரடியாக முதலீடு செய்யலாம். அதேநேரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், 100% அந்நிய நேரடி முதலீட்டிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பொருந்தும் என்றும் கூறினார்.
இதுதவிர, நிறுவனங்கள் தங்களுடைய மீதித்தொகையை செலுத்த 4 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளை, தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.