ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் அந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
எனினும் கடன்சிக்கல் மற்றும் இதர காரணங்களால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க தற்போது டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தள்ளுபடி, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.