ஜம்மு-காஷ்மீரில் 3-ம் அலை அபாயம்: பாதிப்பு விகிதம் அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகரில் மட்டும் பாதிப்பு விகிதம் 45 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் கரோனா பாதிப்பின் மையமாக ஜம்மு-காஷ்மீர் மாறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரில் மட்டும் செப்டம்பர் 1 முதல் 14-ம் தேதி வரை 1,611 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 29.02 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சுகாதாரத் துறை புள்ளி விரவரப்படி ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 3,542 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஸ்ரீநகரில் மட்டும் 1,028 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதேபோன்று கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் ஸ்ரீநகரில் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி 307 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி 528-ஆக அதிகரித்தது. தற்போது செப்டம்பர் 14-ம் தேதி வரை 656 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 35 பேர் உயிரிழந்தனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகரான ஸ்ரீநகரில் மட்டும் 22 பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் கரோனா மையமாக மாறிவருகிறது.