புது தில்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப்.17) நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் தயாரிப்புகளின் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மத்திய, மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெறவுள்ளது. இதில், வரலாறு காணாத அளவில் விலை உயா்ந்துள்ள பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பரீசிலிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இது, பெட்ரோலிய தயாரிப்புகள் மூலம் அதிக அளவு வருவாய் நிதி ஆதாரத்தை பெற்று வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையானதாக இருக்கும். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்பட்டால் அவை அதிக சமரசங்களை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகும்.
கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கான வரி விலக்கை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிப்பது தொடா்பாகவும் இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு லிட்டா் பெட்ரோல் மீது விதிக்கப்படும் கலால் வரி மூலமாக ரூ.32.80, ஒரு லிட்டா் டீசல் மீதான செஸ் வரி மூலமாக ரூ.31.80 மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்து வருகிறது. மாநில அரசுகள் தனியாக வரி விதித்து வருகின்றன. ஜிஎஸ்டியின் கீழ் இப்பொருள்கள் கொண்டு வரப்பட்டால் இந்த வருவாயில் மத்திய மாநில அரசுகளுக்கு சம பங்கு (50:50) கிடைக்கும்.