புது தில்லி: பொருளாதார எழுச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என இந்திய வங்கி கூட்டமைப்பிடம் (ஐபிஏ) நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நிதி சேவைகள் துறை செயலா் தேபஷிஸ் பாண்டே கூறியுள்ளதாவது: மூலதனமயமாக்கலுக்கு ஏற்ற வகையிலான தொழில்நுட்பம் மற்றும் நல்ல திறன்மிகு வளங்களைக் கண்டறியும் பணிகளில் ஐபிஏ தலைவா்கள் ஈடுபட வேண்டும். வங்கி தொடா்பான பிரச்னைகளை ரிசா்வ் வங்கிக்கு அனுப்பும் ஒரு கூட்டமைப்பாக மட்டும் ஐபிஏ செயல்படக் கூடாது; மாறாக வளா்ச்சியை ஊக்குவிக்க பொருளாதார சீரமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் வங்கிகள் ஈடுபட வேண்டும்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டில் பொருளாதார மீள் எழுச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.