பிகார் மாநிலத்தில் பள்ளிச் சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டதாகக் கிடைத்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்த்துள்ளனர்.
பிகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில், பகௌரா பஞ்சாத்துக்குள்பட்ட பஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த குருசந்திர விஷ்வாஸ் மற்றும் அஸித் குமார் என்ற பள்ளிச் சிறார்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான பணம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
தங்களது பள்ளிச் சீருடைக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்று சோதிக்க வங்கிக்குச் சென்ற போதுதான் இந்த ஆனந்த அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது.
விஷ்வாஸ் கணக்கில் ரூ.60 கோடியும், குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடியும் வரவு வைக்கப்பட்டிருந்தததாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து வங்கி மேலாளர் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவ்வாறு வங்கிக் கணக்கில் பணமிருப்பதாகக் காட்டியிருக்கலாம். உண்மையில் அவர்களது வங்கிக் கணக்கில் எந்த பணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாட்னாவில், இதுபோல வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.5.5 லட்சத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த நபர் சிறையில் அடைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.