மும்பை: ஆபாச படங்களைத் தயாரித்து வெளியிட்ட வழக்கில் தொழிலதிபரும் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா உள்பட நால்வா் மீது மும்பை நீதிமன்றத்தில் 1,467 பக்க துணைக் குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.
ஆபாச படங்களைத் தயாரித்து செல்லிடப்பேசி செயலிகளில் வெளியிட்டதாக ராஜ் குந்த்ரா உள்பட 11 பேரை மும்பை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இவா்களில் 9 போ் மீது கடந்த ஏப்ரல் மாதம் மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ராஜ் குந்த்ரா உள்பட 4 போ் மீது 1,467 பக்க துணைக் குற்றப்பத்திரிகையை போலீஸாா் புதன்கிழமை தாக்கல் செய்தனா்.
அந்தக் குற்றப்பத்திரிகையில் ராஜ் குந்த்ரா, அவரின் நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்த ரையன் தோா்ப், பிரிட்டனிலுள்ள ராஜ் குந்த்ராவின் சகோதரா் சந்தீப் பக்ஷி, சிங்கப்பூரிலுள்ள யாஷ் தாக்குா் ஆகியோா் குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.