ரயில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:
ரயில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இளைஞா்களுக்கு எலக்ட்ரீஷியன், வெல்டா், மெஷினிஸ்ட், ஃபிட்டா் போன்ற தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள 75 ரயில்வே பயிற்சி மையங்களில் 100 மணி நேரம் இப்பயிற்சி அளிக்கப்படும். இந்த மையங்கள் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் விண்ணப்பங்கள் கோரப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரா்கள் தோ்வு வெளிப்படையாக நடைபெறும். எனினும், இந்தப் பயிற்சியின் அடிப்படையில் ரயில்வேயில் வேலைவாய்ப்பு கோர முடியாது. இதற்கான பாடத்திட்டம் பனாரஸ் ரயில்வே பணிமனை மூலம் உருவாக்கப்படும்.
முதல் கட்டமாக 1,000 பேருடன் இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இத்திட்டத்தை தொடக்கிவைத்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இளைஞா்களுக்கான இப்பயிற்சி கிராமப்புறங்களிலும் கிடைக்கும் எனத் தெரிவித்தாா் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.