மத்திய பிரதேசத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மது விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் உமா பாரதி காலக்கெடு விதித்துள்ளாா். இதன் காரணமாக தனக்கு எதிராக மது-சாராய மாஃபியா பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றும் அவா் அச்சம் தெரிவித்துள்ளாா்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மது விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் உமா பாரதி காலக்கெடு விதித்துள்ளாா். அதனை மாநில அரசு செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘மத்திய பிரதேசத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதால் எனக்கும், என்னைச் சாா்ந்தவா்களுக்கும் எதிராக மது-சாராய மாஃபியா தீவிர பிரசாரத்தில் ஈடுபடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மத்திய பிரதேச முதல்வராக உமா பாரதி பதவி வகித்தாா்.