தில்லி ஆம் ஆத்மி அரசின் முன்னெடுப்புகளை நகலெடுக்கும் பாஜகவுக்குப் பதில் கோவா மக்கள் ஆம் ஆத்மியையே தேர்வு செய்ய வேண்டும் என தில்லி முதல்வரும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
வடக்கு கோவாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் இதுதொடர்பாக மேலும் கூறியது:
"கோவாவில் குடிநீர் இலவசம் என்று சாவந்த் (கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்) அறிவித்தார். நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தில்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பே இது செய்து முடிக்கப்பட்டது. அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தைத் தொடங்கியிருப்பதாகக் கேள்விபட்டோம். தில்லியில் இதை 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டோம்.
இதையும் படிக்க | 'எண் ஒன்றை அழுத்தவும்': இந்த மோசடி எச்சரிக்கை உண்மையில்லை
தில்லியில் என்ன நடந்தாலும், சாவந்த் அதை கோவாவில் நகலெடுக்கிறார். அசல் இருக்கும்போது போலி எதற்கு? கோவா மக்கள் அசலுக்கு வாக்களிக்க முடியும் பட்சத்தில் போலிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? போலி மனிதர்கள் குழப்பத்தைதான் உண்டாக்குவார்கள்."
கோவாவில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஆம் ஆத்மி மற்றும் பாஜக தலைவர்களிடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.