கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கரோனாவின் அடுத்தடுத்த அலைகளைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ள நிலையில் அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 90% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
மேலும் 100% தடுப்பூசி இலக்கை கேரள அரசு விரைவில் எட்டும் என தெரிவித்துள்ள அவர், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கேரளத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,67,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வெளியிட்ட தகவலில் அங்கு புதிதாக 15,692 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 92 பேர் பலியாகினர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,683-ஆக அதிகரித்துள்ளது. Corona vaccine