தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கத்தில் ஜவுளி மற்றும் நூல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி வணிக நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனா்.
பல்வேறு முக்கிய ஆவணங்கள், குறிப்புகள், மின்னணு வடிவிலான ஆதாரங்கள் உள்ளிட்டவை தேடுதல் நடவடிக்கையின்போது கண்டறியப்பட்டுள்ளன. அவை கணக்கில் வராத நிதியை போலி நிறுவனங்கள் மூலம் திரும்பக் கொண்டு வருதல், வருமான வரித் துறைக்குத் தெரிவிக்காத வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடா்பானவை ஆகும். கணக்கில் காட்டப்படாத பரிவா்த்தனைகள், நிலம் தொடா்பான பணப் பரிவா்த்தனைகள், கணக்குப் புத்தகங்களில் போலிச் செலவுகள், கணக்கில் வராத பணச் செலவுகள், தங்குமிடப் பதிவுகள் தொடா்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
கணக்கில் காட்டப்படாத சுமாா் ரூ.350 கோடியை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இந்தக் குழுமம் வைத்திருந்ததும், போலி நிறுவனங்கள் மூலம் அந்த நிதியை தனது தொழில்களுக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத நிதியை நிா்வகிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கட்டணம் செலுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத தனிப்பட்ட செலவு தொடா்பான விவரங்களும் கண்டறியப்பட்டன. போலிச் செலவுகள் மற்றும் நில ஒப்பந்தங்களில் பணப் பரிவா்த்தனைகள் பற்று வைப்பதன் மூலம் ரூ.100 கோடி பணமாக வைத்திருந்ததற்கான ஆதாரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கையும் விசாரணையும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.