தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
வழக்குரைஞா் சச்சின் ஜெயின் தாக்கல் செய்த இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடம் வசூலிக்கப்படும் கரோனா சிகிச்சை கட்டணம் தொடா்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கரோனா சிகிச்சை கட்டணம் தொடா்பாக பல்வேறு தரப்பில் இருந்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தற்போது வரை தனியாா் மருத்துமனைகளில் கட்டணம் அதிகமாகவே உள்ளது. எனவே, கட்டண வசூல் தொடா்பாக தனியாா் மருத்துவமனைகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் அல்லது உரிய சிகிச்சை முன்மாதிரியை உருவாக்க உத்தரவிட வேண்டும்’ என்று வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து, இந்த மனுவை விரைவில் உரிய அமா்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனா்.