“அரசு அலுவலர்களை வைத்திருப்பதே எங்களின் செருப்புக்களை தூக்கத்தான்” என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பேசியது பெரும் சர்ச்சைானது. இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இனி நல்ல வார்த்தைகளையே பயன்படுத்தவுள்ளதாகவும் அதேபோல் திக் விஜயசிங்கும் நல்ல வார்த்கைளையே பயன்படுத்த வேண்டும் என உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.
அரசு அலுவலர்களை அவமதித்து பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பேசிய விடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. இதை கடுமையாக விமரிசித்த திக் விஜய்சிங், குறைத்து பேச வேண்டும் என்றும் மிகவும் ஆட்சேபிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், அவர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக உமாபாரதி எழுதிய கடிதத்தில், "என்னுடைய வார்த்தைகளால் நான் மிகவும் காயமடைந்தேன். நீங்கள் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்று நான் (திக்விஜய் சிங்) திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். இனிமேல் நான் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தவுள்ளேன். உங்களால் முடிந்தால் நீங்களும் அதையே செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உமாபாரதி, "அரசு அலுவலர்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். அவர்கள் இருப்பதே எங்களின் செருப்புக்களை தூக்கத்தான். அரசு அலுவலர்கள் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை.
முதலில் தனிப்பட்ட அளவில் கலந்தாலோசனை நடைபெறும். பின்னர்தான் அரசு அலுவலர்கள் அறிக்கையை தயார் செய்வார்கள். என்னைக் கேளுங்கள் நான் சொல்கிறேன். மத்திய அமைச்சராகவும் முதலமைச்சராகவும் 11 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். முதலில் ஆலோசனைகள் நடைபெறும் அதன் பின்புதான் அறிக்கைகள் தயார் செய்யப்படும்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் திட்டம்
அரசியல்வாதிகளை அரசு அலுவலர்கள் கட்டுப்படுத்துவது என சொல்லுவதெல்லாம் முட்டாள்தனமானது. அவர்களால் அதனை செய்யவே முடியாது. அவர்களுக்கு எங்கு அதிகாரம் உள்ளது. அவர்களுக்கு சம்பளம் அளிப்பது அவர்களை பணி அமர்த்துவது எல்லாம் நாங்கள் தான்.
அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது பதவி இறக்கம் செய்வது எல்லாம் நாங்கள் தான். எங்களின் அரசியலுக்காக தான் அவர்களை பயன்படுத்துகிறோம்" என பேசியிருந்தார்.