குஜராத்தில் உள்ள முன்னணி வைர தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பில் ஈடிபட்டதை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் வைர நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை, குஜராத்தில் சூரத், நவ்சாரி, மோர்பி, வான்கனர் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "முதற்கட்ட விசாரணையில், சுமார், 518 கோடி மதிப்பிலான சிறிய அளவிலான மெருகூட்டப்பட்ட வைரங்களை கணக்கில் வராமல் வாங்கி விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், 95 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை விற்று அதன் மூலம் பணம் பெற்றுள்ளார். இது வருமானமாக கருதப்படுகிறது. இருப்பினும், இதற்கு கணக்கு காட்டப்படவில்லை என்பது தரவுகளின் மூலம் தெரியவருகிறது. வரி செலுத்த வேண்டிய நபர், 2,742 கோடி ரூபாய்க்கு சிறிய அளவிலான வைர கற்களை விற்றிருப்பது கணக்கு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், கணிசமான வைர விற்பனை பணம் மூலமாகவே நடைபெற்றுள்ளது. ஆனால், இப்பணம் பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்து பெறப்பட்டுள்ளது. சோதனை நடத்தப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான பல வங்கி கணக்குகள் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
சோதனைகளின் போது கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் என 1.95 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 10.98 கோடி மதிப்புள்ள 8,900 காரட் கணக்கிடப்படாத வைரம் கண்டுபிடிக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.