இத்தாலியில் நடைபெறும் அனைத்து மத அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இது, பொறாமையின் வெளிப்பாடு என மம்தா மத்திய அரசின் மீது நேற்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
ரோம் நகரை சேர்ந்த சாண்ட் எஜிடியோ என்ற கத்தோலிக்க அமைப்பு இந்த அமைதி மாநாடுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
உலக தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் அளவிலான அரசு பதவியை தான் வகிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ரோமில் நடைபெறவுள்ள உலக அமைதி குறித்து கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், போப் பிரான்சிஸ் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கலந்து கொள்ள எனக்கு இத்தாலி அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. ஒரு மாநில முதலமைச்சராக இருக்கும் நான் இதில் கலந்து கொள்வது சரியாக இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்னை உங்களால் தடுக்க முடியாது. வெளிநாடுகளுக்கு செல்ல நான் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இது நாட்டின் மதிப்பு சம்மந்தப்பட்டது. இந்துக்கள் குறித்து மோடி பேசிக்கொண்டே இருக்கிறார். நானும் இந்து பெண்தான். எனக்கு அனுமதி மறுத்தது ஏன்" என்றார்.
அமெரிக்காவாலும் உலக சுகாதார அமைப்பாலும் ஒப்புதல் வழங்கப்படாத கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியிருந்த போதிலும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடிக்கு அனுமதி வழங்கியது எப்படி என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். பவானிப்பூர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவுள்ள மம்தா பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார்.