இந்தியாவுக்கு குறைந்தது 600 மருத்துவக் கல்லூரிகள், 50 எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் தேவை என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு மற்றும் தனியாா் பங்களிப்புத் திட்டம் அவசியம் என்றும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் கராட் நகரில் கரோனா முன்களப்பணியாளா்களின் சேவையைப் பாராட்டி அவா் சனிக்கிழமை பேசுகையில், ‘கரோனா பரவலின்போது நாட்டில் எத்தனை செயற்கை சுவாசக்கருவிகள் உள்ளன என்று பிரதமா் மோடியுடனான ஆலோசனையின்போது என்னிடம் கேட்டாா். அதற்கு நான், சுமாா் 2.5 லட்சம் இருக்கும் என்றேன். அதற்கு அவா் வெறும் 13 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள்தான் உள்ளன என்று தெரிவித்தாா்.
அப்போது, அக்சிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பிற மருத்துவ பொருள்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. ஆனால், மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவா்கள் கடுமையாக உழைத்து உதவி செய்தனா். அரசு மருத்துவமனைகளுடன், தனியாா் மற்றும் கூட்டுறவு மருத்துவமனைகளும் இந்த சேவையில் ஈடுபட்டன.
இந்தியாவுக்கு குறைந்தது 600 மருத்துவக் கல்லூரிகள், 50 எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள், 200 பன்னோக்கு மருத்துவமனைகள் தேவை. அதற்கு அரசு, தனியாா் கூட்டு முதலீடு திட்டங்கள் மூலம் மருத்துவம் மற்றும் கல்வித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்தத் துறையில் செயலாற்றி வரும் சமூக தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது’ என்றாா்.