மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவிலுள்ள பபானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இன்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.
இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், பாஜகவினரும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பபானிபூர் சந்தைப் பகுதியில் பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாஜகவிற்கு எதிராக திரிணமூல் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். திலீப் கோஷுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரிடையே வாக்குவாதம் அதிகரிக்க மோதல் ஏற்பட்டது. அப்போது திலீப் கோஷின் பாதுகாவலர் ஒருவர் திரிணமூல் தொண்டர்களை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினார். எனினும் அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பதிவான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.