மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பவானிபூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளை மனதில் வைத்து இடைத்தேர்தல் நடத்தும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட்டி நடைபெற்று வந்த பிரசாரத்தின் இறுதி நாளில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தோ்தலை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.
படிக்க | பஞ்சாப் காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சித்து
மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூரில் செப்.30-ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா்.
அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் களம் காண்கிறாா். தற்போது எம்எல்ஏ பதவி வகிக்காத மம்தா பானா்ஜி, இந்தத் தோ்தலில் வென்று அப்பதவியை அடைந்தால்தான் முதல்வராகத் தொடர முடியும்.