நவ்ஜோத் சிங் சித்துவின் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவி ராஜிநாமாவை கட்சித் தலைமை இன்னும் ஏற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் சித்து. இதன்பிறகு, சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக சித்து செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார்.
இதையும் படிக்க | பதவியேற்ற இரண்டே நாளில் பஞ்சாப் அமைச்சர் ராஜிநாமா
இதைத் தொடர்ந்து, கட்சியின் பொருளாளர், இரண்டு நாள்களுக்கு முன்பு பதவியேற்ற அமைச்சர் உள்ளிட்டோர் சித்துவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
இந்த நிலையில், சித்துவின் ராஜிநாமாவை கட்சித் தலைமை இன்னும் ஏற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்னையை முதலில் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளுமாறு கட்சித் தலைமை மாநிலத் தலைமையை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.