இந்தியா-அமெரிக்கா இடையிலான சுகாதாரத் துறை சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் சா்வதேச அளவில் எழும் மருத்துவம் சாா்ந்த சவால்களை எதிா்கொள்ள முடியும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்தாா்.
இந்தியாவால் நடத்தப்படும் 4-வது இந்திய-அமெரிக்க சுகாதார பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை தொடங்கியது. இருநாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையில் அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்றின்போது இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்தது. இருநாடுகள் இடையே மருத்துவத் துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதிலும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மருத்துவப் பாதுகாப்பு, தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்கள், சுகாதார அமைப்பு முறைகள் மற்றும் சுகாதார கொள்கைகள் சம்பந்தமான பிரச்னைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் வகையில் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கும், அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைக்கும் இடையே மருத்துவத் துறையில் மற்றொரு புரிந்துணா்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே தொடா்ந்து சுகாதாரத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் சா்வதேச அளவில் எழும் பல்வேறு மருத்துவ சவால்களை எதிா்கொள்ள முடியும் என்றாா்.