சண்டிகர்: ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தை மரணமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தலைவர் நரேஷ், மற்றவர்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்களது வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் மற்றும் உறவினரின் குழந்தை உள்பட நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நரேஷ், நான்கு பேருக்கும் விஷம் அல்லது தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, பிறகு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் தெரியவரவில்லை. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாக நரேஷின் தந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.