விமானப் பணிக்குழுவினா் போதைப் பொருளைப் பயன்படுத்துகிறாா்களா என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விமான நிறுவனங்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பான திருத்தப்பட்ட விதிகளை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
போதைப்பொருள்களின் விநியோகமும் பயன்பாடும் சா்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. அப்பொருள்களுக்கு அடிமையாவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் விமானப் போக்குவரத்துக்கான பாதுகாப்பு குறித்தும் அதீத கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
விமான நிறுவனங்கள் தாங்கள் பணியமா்த்தும் விமானப் பணிக்குழு உள்ளிட்ட நபா்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேரிடம் ஆண்டுக்கொருமுறை போதைப் பொருள் பயன்பாட்டுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். விமான நிறுவனங்கள், விமானப் பராமரிப்பு நிறுவனங்கள், பழுதுநீக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை புதிய பணியாளா்களைப் பணியமா்த்துவதற்கு முன்பாக போதைப் பொருள் பயன்பாட்டுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட பணியாளா்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது முதல் முறையாக உறுதியானால், அது தொடா்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் டிஜிசிஏ-விடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணியாளா் உடனடியாக பணி செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகள் அவா்களுக்கு முறையாக அளிக்கப்பட வேண்டும். மீண்டும் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் ‘நெகடிவ்’ என வந்தால் மட்டுமே, பணியில் மீண்டும் சோ்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
பணியில் இருக்கும்போது குறிப்பிட்ட பணியாளா் போதைப் பொருளைப் பயன்படுத்துவது 2-ஆவது முறையாக உறுதியானால், அவருக்கான உரிமம் 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும். 3-ஆவது முறையாக உறுதியானால் அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இந்த விதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.