அலி பாபர் பாட்ரா என்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய பாதுகாப்பு படையினர் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உரி பகுதியில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, அவர் சரணடைந்தார். இதையடுத்து, அவரின் விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவமும் தனக்கு பயிற்சி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடியோவில், செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். எல்லை தாண்டி செல்வதற்காக 20,000 ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் பாரமுல்லா மாவட்டத்தில் ஆயுதங்களை விற்கும்படி அவரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் பயங்கரவாதி செய்தியாளர்களிடம் கூறினார்.
முதற்கட்டமாக, ஆயுதங்களை விநியோகம் செய்த பின்னர், இரண்டாம் கட்டமாக தனக்கு 30,000 ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் லஷ்கர் முகாமில் பயிற்சி பெற்றேன். செப்டம்பர் 18 ஆறு பயங்கரவாதிகள் அடங்கிய குழுவுடன் காஷ்மீருக்குள் ஊடுருவினோம்" என்றார்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே பாகிஸ்தான் பயங்கரவாதியை ராணுவம் பிடித்திருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | பஞ்சாபில் தொடரும் குழப்பம்: இன்று கூடுகிறது அமைச்சரவை
கடந்த 2016ஆம் ஆண்டு, உரி ராணுவ முகாமில் தாக்குதலை நடத்துவதற்காக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அது தடுத்து நிறுத்தப்பட்டது. இதில், 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்காக இந்திய வான்வழி தாக்குதல் மேற்கொண்டது.