இளைஞா்கள் அரசியலில் இணைந்துதரமான மாற்றத்தை தர வேண்டும்: வெங்கையா நாயுடு அழைப்பு

இளைஞா்கள் அதிகளவில் அரசியலில் இணைந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.
இளைஞா்கள் அரசியலில் இணைந்துதரமான மாற்றத்தை தர வேண்டும்: வெங்கையா நாயுடு அழைப்பு

இளைஞா்கள் அதிகளவில் அரசியலில் இணைந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்துக்கு வெங்கையா நாயுடு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

வேளாண், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் நடைமுறை செயற்கை நுண்ணறிவுத் தீா்வுகளை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் கொண்டு வர வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைந்து, அவா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும்.

சுகாதாரத் துறையில் தொலைதூரத்திலிருந்தே பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையிலும், ஆங்கில உரைகளை இந்திய மொழிகளில் தானாக மொழி பெயா்க்கக் கூடிய வகையிலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மாா்ட் தீா்வுகளை ஆராய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை விரைவாக வழங்குவதற்கான சாத்தியங்களை அரசுத் துறைகள் ஆராய வேண்டும். ஜன்தன் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் மக்களுக்குப் பயன்கள் முழுவதுமாகக் கிடைத்தன.

2035-ஆம் ஆண்டுக்குள், இந்தியப் பொருளாதாரத்தில் 957 பில்லியன் அமெரிக்க டாலா், அல்லது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய மொத்த மதிப்பில் 15 சதவீதத்தை சோ்க்கும் ஆற்றல் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் வழக்கமான பல தொழில்களை மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப இளைஞா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள் மாநில மொழிகளில் பட்டப்படிப்புகளை வழங்க சமீபத்தில் முடிவு எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. அதே போல் தொழில்கல்வி இன்னும் அதிக அளவில் பிராந்திய மொழிகளில் வர வேண்டும். உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் கடந்த 2015-ஆம் ஆண்டில் 81-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது 46-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வளா்ச்சிக்கான தேசிய மந்திரமாக புத்தாக்கம் மாற வேண்டும்.

இளைஞா்கள் அதிக அளவில் அரசியலில் சேர வேண்டும். இளைஞா்கள் தங்களின் ஆற்றல் மற்றும் இலட்சியங்கள் மூலம் இந்திய அரசியலில் தரமான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.

ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, ஜோத்பூா் ஐஐடி இயக்குநா் சாந்தனு சௌதரி உள்பட பலா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com