பஞ்சாபில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் முதலமைச்சராக விரும்புகிறார்கள் என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மாற்றம், மாநில தலைவர் பதவி விலகல் என அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேஜரிவால் கூறியது:
பஞ்சாபில் பெரும் நம்பிக்கையுடன் காங்கிரஸ் தனது அரசை உருவாக்கியது. ஆனால் இன்று அவர்கள் அரசாங்கத்தை கேலி செய்கிறார்கள். அதிகாரத்திற்காக ஒரு கேவலமான சண்டை நடக்கிறது. அவர்களின் தலைவர்கள் அனைவரும் முதல்வராக விரும்புகிறார்கள் என்றார்.
சித்து ஆம் ஆத்மியில் இணைகிறாரா என்ற கேள்விக்கு, “இது கற்பனையான கேள்வி, இது நடந்தால் உங்களிடம் தெரிவிக்கின்றேன்” என்றார்.