உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணை தகராறு காரணமாக மருமகளை மாமியார் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்னா பாத்திமா. இவரது கணவர் முகமது அப்பாஸ். இருவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சாய்னா பாத்திமா, கடந்த 5 நாள்களுக்கு முன்புதான் மீண்டும் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சர்தாவல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் சாய்னா பாத்திமாவின் உடல், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வரதட்சிணை தொடர்பாக சாய்னா பாத்திமாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், மாமியார்தான் தன்னுடைய மகளை(மருமகளை) கொலை செய்ததாக சாய்னாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாய்னா பாத்திமாவின் தொண்டையில் காயம் இருந்ததாகவும், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரி எம்.பி.சிங் தெரிவித்தார்.