ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தில்லிக்கு புதன்கிழமை சென்றிருப்பது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பகேலுக்கும், அம்மாநில அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என தியோ வலியுறுத்தி வருகிறார். இந்தச் சூழலில், மாநிலத்திலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15-க்கும் மேற்பட்டோர் தில்லிக்கு புதன்கிழமை சென்றனர். அவர்கள், முதல்வர் பூபேஷ் பகேலுக்கு ஆதரவு தெரிவிக்கவே தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இருந்தபோதும், "எங்களுடைய தில்லி பயணம் ராகுல் காந்தியின் சத்தீஸ்கர் சுற்றுப்பயணம் தொடர்புடையது' என்று தில்லி வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.