உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை காரணம் காட்டி மேற்குலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனிடையே, குறைந்த விலையில் எண்ணெயை விற்பது குறித்து ரஷியா இந்தியாவிடம் பேசிவருகிறது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள மேற்குலக நாடுகள், தடையை பலவீனக்கும் முயற்சி என விமரிசித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, "உக்ரைன் விவகாரத்திற்கு பிறகும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் மிக பெரிய வாடிக்கையாளராக ஐரோப்பா உள்ளது" என எதிர்வினை ஆற்றியுள்ளது.
இந்தியா, பிரிட்டன் வியூக எதிர்கால மன்றத்தில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் முன்னிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்படி பதில் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு, இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து வரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர் பேசிய ஜெய்சங்கர், "எண்ணெய் விலை உயரும்போது, சந்தைக்கு சென்று மக்களுக்கு நல்ல விலையில் ஒப்பந்தம் தேடுவது இயல்பான ஒன்றே.
இதையும் படிக்க | இம்ரான் கானுக்கு எதிராக அமெரிக்கா சதியா? நடந்தது என்ன?
இன்னும், இரண்டு மூன்று மாதங்கள் காத்திருந்து, ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை யார் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் யார் முன்னதாக வாங்கி கொண்டிருந்தார்களோ அவர்களே தான் இருப்பர் என சந்தேகிக்கிறேன். இது உறுதி. அந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் கூட நாம் இருக்க மாட்டோம்" என்றார்.
அரசுமுறை பயணமாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்துள்ள நிலையில், ஜெய்சங்கரின் கருத்து முக்கியத்துவம் பெறுகி்றது.
உக்ரைன் விவகாரத்தில், ரஷியாவை கண்டிக்காததாலும் அவர்களிடமிருந்து கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டிருப்பதாலும் இந்தியா மீது மேற்குலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன. இதற்கு மத்தியில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் இந்தியா வந்துள்ளார்.