புது தில்லி: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் (சிபிஎஃப்சி) திரைப்படத்தைத் தடை செய்ய முடியாது; ஆனால் திரைப்படங்களுக்கான சான்றிதழை மறுக்க முடியும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், திரைப்படவியல் சட்டம்- 1952, ஒளிப்பதிவு (சான்றிதழ்) சட்டம், 1983 மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒரு திரைப்படத்தை ஆய்வு செய்து "யு', "யு/ஏ', "ஏ' மற்றும் "எஸ்' ஆகிய சான்றுகளாக வகைப்படுத்தி மக்களின் பார்வைக்கு அனுமதியளிக்கலாம்.
2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:
ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் அதிகாரம் சிபிஎஃப்சிக்கு இல்லை. ஆனால் திரைப்படத்தை காட்சிப்படுத்துவதிலும், அதற்கான உரிமம் வழங்குவதிலும், அது தொடர்பான விஷயங்களிலும் தலையிட மாநில அரசுக்கு அதி காரம் உள்ளது.
சினிமாட்டோகிராஃப் சட்டம், 1952-இன் பிரிவு 5பி-இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஒரு திரைப்படத்திற்கான பொதுக் காட்சிப்படுத்தலுக்கான சான்றிதழை வழங்காமல் மறுக்க முடியும்.
2014-15ல் ஒரு திரைப்படத்துக்கும், 2016-17இல் 2, 2018-19இல் 2, 2019-20இல் ஒன்று என இதுவரை சிபிஎஃப்சி மூலம் 6 திரைப்படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது என்றார்.