புதுதில்லி: கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து அனைத்து கரோனா மருந்துகள் மற்றும் கருவிகள் 5 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தில் விற்கப்படுகின்றன. மற்ற மருந்துகள் 5 முதல் 12 சதவீதம் வரை ஜிஎஸ்டி விகிதத்தில் விற்கப்படுகின்றன என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
நாட்டில் அரசு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் 66 சதவீதம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருவதாக சவுத்ரி கூறினார்.
“கரோனா தொற்றுநோய் தொடங்கியபோது, அனைத்து மருந்துகளையும் 5 முதல் 12 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி விகிதத்தில் விற்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
சுகாதார காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதமாக உள்ளது.
மூத்த குடிமக்கள் உடல்நலக் காப்பீட்டு பாலிசிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்று அமைச்சர் கூறினார்.
அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்படும் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின்படி அனைத்து சேவைகளுக்கும் (உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி உட்பட) ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று சவுத்ரி கூறினார்.
தற்போது, உடல்நலக் காப்பீட்டு சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நிலையான விகிதத்தில் விதிக்கப்படுகிறது. மேலும், சுகாதார சேவைகளுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.