மும்பை - கோவா பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியில் ரூ.131.87 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், மும்பை கோவா இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் 11 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தப் பணிகள் முன்கூட்டியே தொடங்க வேண்டியது. ஆனால் வனத் துறை மற்றும் ரயில்வேத் துறையிடமிருந்து நிலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மும்பை - கோவா இணைப்பு இப்பகுதியின் இயத்துடிப்பு போன்றது. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
இந்த தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின்போது அரசு நிலங்களில், தொழில் பூங்காக்களும், வாகன முனையமும் அமைக்கப்படும் என்று கூறினார்.