முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவருமான ராகேஷ் கங்வால் தான் படித்த கல்லூரிக்கு ரூ.100 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜஜடி.யின் முன்னாள் மாணவரான ராகேஷ் கங்வால், அங்கு இயங்கிவரும் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினை மேம்படுத்த, இந்த மாபெரும் நன்கொடையினை வழங்கியுள்ளார்.
ஐஐடி கான்பூர் கடந்தாண்டே மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பிரிவினை தொடங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஐஐடி கான்பூருடன் கங்வால் ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவர் 100 கோடி ரூபாயை நன்கொடையினை அளித்துள்ளார்.
இதுகுறித்து ஐஐடி கான்பூர் வளாகத்தின் இயக்குனர் அபய் கரண்டிகர் கூறியதாவது,
ஐஐடி கான்பூருக்கு இது மிகப்பெரிய விஷயம். இண்டிகோ ஏர்லைன்ஸின் இணை நிறுவனர் ராகேஷ் கங்வால், எங்களின் முன்னாள் மாணவர். ஐஐடி கான்பூரில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவை ஆதரிக்கும் நோக்கில் ரூ.100 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இண்டிகோ இணை நிறுவனர் கங்வால் விரைவில் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இதுபோன்ற உன்னதமான முயற்சியில் கல்வி நிறுவனத்துடன் இணைந்திருப்பது எனது பாக்கியம். பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான தலைவர்களை உருவாக்கிய நிறுவனம், தற்போது சுகாதாரத் துறையை மேம்படுத்துவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.
மேலும் சுகாதாரம் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது, மேலும் இந்த முயற்சி சுகாதாரத் துறையில் புதுமைகளைத் துரிதப்படுத்தும்.
இந்த மருத்துவ பள்ளி இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்படும். இதில் முதல் கட்டமாக 500 படுக்கை வசதிகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை, கல்விக்கான வசதிகள், குடியிருப்புகள், விடுதிகள், சேவை எனப் பல வகையாகக் கட்டப்படும், மொத்தம் 8 பிரிவுகளாக இருக்கும் இந்த கட்டமைப்பானது, 10,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இந்த கட்டமைப்பு வசதிகளை 3 - 5 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக, 1000 படுக்கை வசதிகள் கொண்டதாக மேம்படுத்தப்படும். இதில் மருத்துவ பிரிவுகள், ஆராய்ச்சி பகுதிகள், துணை மருத்துவம், மருத்துவமனை நிர்வாகம், பொதுச் சுகாதார திட்டங்கள், விளையாட்டு மருத்துவம், துணை மருத்துவத் துறைகளைச் சேர்ப்பது எனப் பலவகையிலும் விரிவாக்கம் செய்வதும் அடங்கும் என்றார்.