எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
நாட்டில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே லிட்டருக்கு 75 பைசா மற்றும் 76 பைசா அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களில் கிட்டத்தட்ட லிட்டருக்கு 9 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வினால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.
'பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிபொருள்கள் மீதான தொடர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எரிபொருள் விலை உயர்வு மீது விவாதம் நடத்த மறுத்ததால் நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.